கீழாநெல்லி என்றாலே மஞ்சள் காமாலையைக் குணப்படுத்தும் மூலிகை என்பது பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால், மஞ்சள் காமாலையுடன் நின்று விடவில்லை இதன் சேவை. கிட்டத்தட்ட 2,000 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்பட்டு வரும் கீழாநெல்லியை இன்னமும் ஆய்வு செய்துகொண்டே இருக்கிறார்கள் விஞ்ஞானிகள். பைல் நிரூலின், நார் செக்குரினின், நிர் பைலின், தேலிக் அமிலம், எல்லாஜிக் அமிலம், ஹேலிக் அமிலம் போன்ற 50-க்கும் மேற்பட்ட மூலக்கூறுகள் இதில் இருப்பதைப் பார்த்து ஆச்சர்யத்தில் வாயடைத்துக் கிடக்கிறார்கள். சாதாரண களைச்செடியாக குப்பையில் வளரும் ஒரு சின்னஞ்சிறிய செடிக்குள், இத்தனை மருத்துவ குணங்களா எனக் கொண்டாடுகிறது உலகம். ஆனால், ‘உள்ளூர் மாடு விலை போகாது’ என்பதுபோல அருகிலிருக்கும் அற்புதத்தை நாம் அவ்வளவாகக் கண்டுகொள்வதே இல்லை.
இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் வளரும் இதன் இலைகளின் அடிக்காம்பில் வரிசையாக காய்கள் காய்ப்பதால், கீழ்க்காய்நெல்லி என அழைக்கப்பட்டது. பேச்சு வழக்கில் கீழாநெல்லி, கீழ்வாய் நெல்லி, கீட்கா நெல்லி என அழைக்கப்படும் கீழாநெல்லியின் மருத்துவக் குணங்களைக் கேட்டால் மலைத்துப் போவீர்கள்.
கீழாநெல்லி இலையுடன் சிறிது மஞ்சளைச் சேர்த்து அரைத்து உடலில் தேய்த்து, பதினைந்து நிமிடங்கள் ஊறவிட்டு, குளித்தால்… தோல் நோய்கள் குணமாகும். கீழாநெல்லிச் செடியை நன்றாக அரைத்து சொறி, சிரங்கு, படைகளில் பற்றுப்போட்டால் உடனே குணமாகும். கீழாநெல்லிச் செடியை நன்றாக மென்று பல்துலக்கி வந்தால் பல்வலி குணமாகும். மேலும் செடியை நன்றாக மென்று ஈறுகளில் சாறு நன்றாகப் படிய வைத்திருந்தால்… ஈறு நோய்கள் குணமாகும்.
கீழாநெல்லி செடியுடன் கரிசலாங்கண்ணி இலையை சமஅளவு எடுத்து பால்விட்டு அரைத்து, நெல்லிக்காய் அளவு பாலுடன் காலை, மாலை இருவேளை உட்கொண்டு வந்தால், ரத்தசோகை, ரத்தக்குறைவு நோய் நீங்கும்.
கல்லீரல் தொடர்பான நோய்களும் குணமாகும். கல்லீரல் பிரச்னைக்கு லட்சங்களில் பணத்தைச் செலவழித்து பெறும் வைத்தியத்தை, இலவசமாகவேத் தருகிறது கீழாநெல்லி. இன்றைக்கு மனிதர்களுக்குள்ள மற்றொரு பெரிய நோயான நீரிழிவு நோய்க்கும் தீர்வைச் சொல்கிறது இந்த சிறியச் செடி. இதை அரைத்து, பாலுடன் கலந்து தொடர்ந்து உட்கொண்டு வந்தால், ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்.
இதுமட்டுமா குடல்புண், தொண்டை நோய்கள், வயிற்றுப் பிரச்னைகள், அதிக உஷ்ணம், கண்நோய்கள், மாதவிடாய்ப் பிரச்னைகள், பசியின்மை, தீராத அழுகிய புண்கள், வீக்கம் என எத்தனையோ பிரச்னைகளைத் தீர்த்து வைக்கிறது கீழாநெல்லி.
கீழாநெல்லி பொடி, நெல்லிக்காய் பொடி, கரிசலாங்கண்ணி பொடி ஆகிய மூன்றையும் சமஅளவு எடுத்து. தேனில் குழைத்து உண்டு வந்தால்… அடிக்கடி வரும் சளித்தொல்லை குறையும், ரத்த சோகை மாறும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
கீழாநெல்லி புற்றுநோய்க்கு எதிராகச் செயல்படுவதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மஞ்சள் காமாலை நோய்க்கு கீழாநெல்லியைவிட கைகண்ட மருந்து இல்லை என்றே சொல்லலாம். இதை ஆங்கில மருத்துவர்களும் ஒப்புக்கொள்கிறார்கள்.
நவீன மருத்துவ வசதிகள் இல்லாத அந்தக் காலத்திலேயே கண்களில் உள்ள வெண்கரு, மஞ்சளாக மாறுவதை வைத்து மஞ்சள் காமாலையைக் கண்டுபிடித்த முன்னோர்கள், கீழாநெல்லியையும் ஆட்டுப்பாலையும் மட்டுமே கொண்டு, அந்தக் காலத்தில் உயிர்க்கொல்லி நோயான மஞ்சள் காமாலையில் இருந்து காத்துக்கொண்டார்கள்.
மனிதகுலம் நோயின்றி வாழ்வதற்காகவே நம் காலடியில் கிடக்கும் கீழாநெல்லிக்கு இனியாவது மரியாதை செய்வோம். அனைத்து வீடுகளிலும் வளர்ப்போம்.
பித்தப்பைக் கல்லைத் தடுக்கும்!
கீழாநெல்லியின் மருத்துவக் குணங்கள் பற்றிப் பேசும் தேனி மாவட்டம் உத்தமப்பாளையம், சித்தமருத்துவர் அமுதா, ”இதன் தாவரவியல் பெயர் ‘ஃபிலாந்தஸ் அம்ரஸ்’ அல்லது ‘நிரூரி’ (Phyllanthus amrus or Niruri). கீழா நெல்லியைப் பொறுத்தவரை மஞ்சள் காமாலைக்கான மருந்துனுதான் பொதுவா நினைக்கிறாங்க. ஆனா, இது அருமையான கிருமிநாசினி. இந்த இலைகளைக் காய வெச்சு தயாரிச்ச கஷாயத்தை புண்களை கழுவப் பயன்படுத்தலாம். இது துவர்ப்பு சுவைகொண்ட மூலிகைங்கிறதால, பித்தப்பையில கல் உற்பத்தி ஆகிறதைத் தடுக்கும். கல்லீரல் தொடர்பான பிரச்னைகளுக்கும் கீழாநெல்லி நல்ல மருந்து” என்கிறார்.