Sunday, 12 February 2023

அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில்

 அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் வரலாறு🙏🏻




திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் மிக முக்கியமானதாக அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் திகழ்கிறது. 


குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்பதற்கேற்ப தமிழ்நாட்டில் உள்ள மலை மற்றும் குன்றுகளில் முருகப்பெருமான் கோவில்கள் நிறைந்து காணப்படுகின்றன. அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் மிக முக்கியமானதாக அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் திகழ்கிறது.


அலகுமலை கோவில் தல வரலாற்றை அறிய வரலாற்று சான்றுகளும் இலக்கிய சான்றுகளும் உள்ளன. திருமலை நாயக்கர் காலத்து கல்வெட்டு ஒன்று கைலாசநாதர் கோவில் முன்பாக உள்ளது. அக்கல்வெட்டு கி.பி.1641–ம் ஆண்டு எழுதப்பட்டது.


பெயர் காரணம் :


அலகு என்றால் ‘மூக்கு’ என்பது பொருள். மூக்கின் வடிவம் போல் இந்த மலை அமைந்து உள்ளதால் ‘அலகு மலை’ என்று அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது. அலகு மலைக்கு கீழே அழகாபுரி அம்மன் என்ற ஊர்க்காவல் தெய்வம் ஒன்று இருப்பதால் இந்த மலைக்கு அலகுமலை என்ற பெயர் வந்ததாகவும் சிலர் கூறுகிறார்கள். மலை மீது முருகப்பெருமான் குடிகொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.


மலை அடிவாரத்தில் மயில் வாகன மண்டபம் உள்ளது. இதையடுத்து படியேறி எட்டு தூண்கள் கொண்ட மண்டபத்தை கடந்தால், இடதுபுறத்தில் பாதவிநாயகரை தரிசிக்கலாம். அலகுமலை படிகளின் ஆரம்பத்தில் பாத விநாயகர் கோவில் உள்ளது. விநாயகரை வழிபட்டு விட்டு, வடக்கு நோக்கி அமைந்துள்ள படிகளை கடந்தால் இடது புறம் இடும்பன் சன்னிதி அமைந்துள்ளது.


ஆறுபடை வீடுகள் :


இடும்பன் சன்னிதியைக் கடந்து மலையின் மேற்காக உள்ள 300 படிகளை கடந்து மேலே சென்றால் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளையும் தரிசனம் செய்யலாம். இந்த ஆறுபடை வீடுகள் கோவில் 1984–ம் ஆண்டுகளில் கட்டப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள ஆறுபடை வீடுகளில் முருகப்பெருமான் எந்தக்கோலத்தில் உள்ளாரோ, அதே போன்று இந்த சன்னிதிகளிலும் காட்சி தருவது சிறப்பம்சமாகும். அத்துடன் சண்முகருக்கு ஒரு சன்னிதி அமைந்துள்ளது. மலை பாதையில் உள்ள கார்த்திகை மண்டபத்தில் நின்றபடி, ஒரே சமயத்தில் ஆறுபடை முருகனையும் மேலே ஏழாவது படைவீடாக அலகுமலை குமரனையும் கண்குளிர தரிசனம் செய்ய முடியும். ஆறுபடை வீடு சன்னிதிகளின் அருகில் நவக்கிரக சன்னிதி உள்ளது.


இடும்பன் சன்னிதி அருகில் குழந்தை குமார் கோவில் உள்ளது. இங்கு அலகுமலை குமரன், பாலகனாக காட்சி அளிக்கின்றார். குழந்தை வரம் வேண்டுபவர்களுக்கு, அதை நிறைவேற்றும் தெய்வமாக இந்த பாலமுருகன் திகழ்கிறார். பழனி மலையில் இருப்பது போல் ஆண்டி கோலத்தில், சிறிது குஞ்சம் போன்று முடியுடன் வலது கையில் தண்டாயுதத்தை தாங்கியபடி இறைவன் காட்சி தருகிறார்.


முருகனின் சமயோசிதம் :


அலகுமலை கோவில் கிழக்கு மேற்காக அமைந்துள்ளது. கிழக்கில் தாழ்ந்தும் மேற்கில் உயர்ந்தும் காணப்படுகிறது. கோவில் கருவறையில் முத்துகுமாரசாமி பாலதண்டாயுதபாணியாக, முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.


ஒரு முறை திருகயிலாயத்தில் பாலகனான முருகப்பெருமான் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவரை பார்வதிதேவியும், கங்காதேவியும் தன் அருகில் வருமாறு அழைத்தனர். ஆனால் முருகப்பெருமான், அவர்கள் அருகில் செல்லாமல் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சிவபெருமான், முருகனின் அருகில் சென்று, ‘இங்கே உள்ள இரண்டு தாய்மார்களில் உனக்கு கங்காதேவியை பிடிக்குமா? பார்வதிதேவியை பிடிக்குமா?’ என்று கேள்வி எழுப்பினார்.


அதற்கு முருகப்பெருமான், ‘அறன் மாதாவின் மீதுதான் எனக்கு மிகுந்த ஆசை’ என்று கூறினார்.


இவ்விடத்தில் முருகப்பெருமான் கூறிய பதில் சமயோசிதமானது. அதாவது ‘அறன்மாதா’ என்ற சொல்லுக்கு இரண்டு பொருள் உண்டு. ‘அறம் வளர்த்த நாயகி’ என்பது ஒரு பொருள். அறம் வளர்த்த நாயகி என்றால் பார்வதி தேவியை குறிக்கும். மேலும் ‘உயிர்களை காக்கும் நீர்’ என்ற பொருளும் உண்டு. இது கங்காதேவியை குறிப்பதாகும். இவ்வாறு முருகப்பெருமான் ஒரு வார்த்தையில் இரண்டு அன்னையரையும் பிடிக்கும் என்று கூறினார்.


இத்தகைய சிறப்புகளையுடைய பாலதண்டாயுதபாணியை காண கோவிலுக்குள் நுழையும் முதலிலே இருப்பது கொடிமரம். கொடிமரத்திற்கு மேற்கு நோக்கி மயில் வாகனமும் அதற்கு அருகில் பலிபீடமும் உள்ளது. தல விருட்சமாக வில்வ மரம் கோவிலின் இடது புறத்தில் அமைந்துள்ளது.


கோவில் மகா மண்டபத்தின் உள்ளே வலது புறத்தில் கடந்த 18 ஆண்டுகளாக சிறப்பு சங்கடஹர சதுர்த்தி விழாக்காணும் ஆனந்த விநாயகரும், வலம்புரி விநாயகரும் அருள்பாலிக் கிறார்கள். இடது புற மேடையில் வீரபாகு தேவரும், தெற்கு நோக்கிய தனி சன்னிதியில் தேவியர் வள்ளி, தெய்வானையும் அருள்பாலிக்கிறார்கள். கர்ப்பக்கிரகத்தில் முருகன் ஆண்டி கோலத்தில் இருப்பதால் வள்ளி, தெய்வானை கோவில் தனியாக அமைக்கப்பட்டுள்ளது.


கவலை தீர்க்கும் கந்தன் :

நடுவில் கர்ப்பக்கிரகம் உள்ளது. இதில் முருகவேள் ‘முத்துகுமார பால் தண்டாயுதபாணி’ எனும் பெயர் தாங்கி கண்களை சற்று தாழ்த்திய நிலையில் கையில் தண்டாயுதத்துடன் ஞான குருவாக காட்சி தருகிறார். ஞான குருவான அவரை நெஞ்சாரப்பணிவோரின் குறைகள், கவலைகள், பிரச்சினைகள் தீர்வது இன்றும் நடக்கும் நிகழ்வாகும். சுமார் 4 அரை அடி உயர திருவுருவில் காட்சி அளிக்கும் முருகப்பெருமானை, வெள்ளிக் கவசத்தில் காணும்போதும் கண்கள் இமைகளை மூட மறுக்கின்றன. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலை காண சுமார் 300 படிகளில் ஏறி செல்ல வேண்டும். வாகனங்கள் கோவில் வரை செல்ல சாலை வசதியும் உள்ளது.


நடை திறந்திருக்கும் நேரம்: 


காலை 6:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் மாலை 7 மணி வரையிலும் திருக்கோயில் நடை திறந்திருக்கும்.


அமைவிடம் :


திருப்பூருக்கு தென்கிழக்கில் தாராபுரம் சாலையில் 22 கிலோமீட்டர் தூரத்தில் அலகுமலை கிராமம் அமைந்துள்ளது. 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த கிராமத்தில், அழகு பெற்று எழில் சூழ்ந்த அலகுமலை காணப்படுகிறது. சூரியனுடன் சேர்த்து ஒன்பது கிரகங்கள், நவக்கிரகங்களாக உள்ளன. அது போன்று இந்த மலையை சுற்றிலும் ஏழு மலைகள் உள்ளன. அவை சென்னிமலை, சிவன் மலை, வட்டமலை, ஊதியூர் மலை, பழனிமலை, மருதமலை, கதித்தமலை ஆகியனவாகும். இந்த ஏழு மலைகளுக்கு நடுவில் அலகுமலை காட்சியளிக்கிறது. இதுவும் அலகுமலையின் தனிச் சிறப்பு ஆகும். 


#From ; TirupurTalks

சென்னிமலை முருகன் கோவில்

 *"39 ஆண்டுகளுக்கு முன் ..சென்னிமலையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு*

*"இதே பிப்ரவரி 12 (1984) அன்று நம் சென்னிமலையில் நிகழ்ந்த அற்புதம்*"




லட்சக்கணக்கான மக்கள் கண்டு களிக்க, இரட்டை மாடுகள் பூட்டப்பட்ட வண்டி நம் சென்னிமலையின் 

1320படிக்கட்டுக்கள் வழியாக மலை, உச்சியை அடைந்த அதிசயம்! 

 

· 12.2.84 . கிழக்கே வெளுத்தது. தமிழகத்தின் பல ஊர்களில் இருந்தும் மக்கள் மலை அடிவாரத்தில் அடிவாரத்தில் இருந்து மலை உச்சி வரையில் படிக்கட்டுக்களின் இரு பக்கங்களில், அதிகாலையிலிருந்தே நின்றும், அமர்ந்தும், மரக்கிளைகளில் தொங்கிக் கொண்டும் தங்களுக்கான இடத்தைத் தக்க வைத்துக்கொள்ள ஆயத்தமாயினர்.


· 12.2.84 அன்று காலை சரியாக 7:30 மணி. அலங்காரம் செய்யப்ட்ட இரட்டை மாட்டு வண்டியில் பூட்டப்பட்ட இரண்டு காளை மாடுகளும் கம்பீரமாக தயாராக இருக்க, அப்பொழுதுதான் வண்டியை யார் ஓட்டுவார் என்று அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்டபடி பச்சை வேட்டி மஞ்சள் துண்டு அணிந்து, வண்டியை ஓட்ட, வண்டியில் அமர்ந்தவர் 60 வயதான பெருந்துறை சிவன்மலைக் கவுண்டர்.


· சிவன்மலைக் கவுண்டர் வண்டியில் ஏறி உட்கார்ந்ததும், காளைமாடுகள் இரண்டும் கம்பீரமாகப் படிக்கட்டுக்களில் ஏற ஆரம்பித்து விட்டன.


· காளை மாடுகள் ஒவ்வொரு படியை மிதித்து மேலேறும்போது மலையே “அரகரா” என்று முழக்கமிட்டதைப் போல, அடிவாரம் முதல் மலை உச்சி வரை இருந்த பக்தர்களின் அரகர முழக்கங்கள் அதிர்ந்து எதிரொலித்தன.


· லட்சக் கணக்கான மக்கள் சுற்றிலும் இருந்து அரகரா முழக்கங்களை எழுப்பியபோதும் வண்டியில் பூட்டப்பட்ட மாடுகள் இரண்டும் மக்கள் கூட்டத்தைக்க் கண்டும், கோஷங்களைக் கேட்டும் சிறிதும் மிரளவில்லை. இராணுவ வீரர்களைப் போல் ஒருவிதமான மிடுக்கோடு மலைப்படிகளில் ஏறின ! சரியாக நாற்பத்தாறு நிமிடங்களில் ஆயிரத்து முன்னூற்று இருபது படிகளையும் கடந்து, மலையுச்சியிலுள்ள முருகன் சந்நிதியில் போய் நின்றன.


· மலையுச்சியை வண்டி மாடுகள் அடைந்ததும் லட்சக்கணக்கான மக்களின் அரகரா முழக்கமும் உச்சத்தைத்தொட,வண்டி மாடுகளுடன் சிவன்மலைக் கவுண்டருக்கும் வண்டி மாடுகளுக்கும் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.


· பிரகார வழிபாட்டுக்குபின் சிவன்மலைக்கவுண்டர் வண்டியின் மீது ஏறி நின்று, நிகழ்வுக்கு வண்டி, மாடுகள், சாட்டை மற்றும் உபகருவிகளை வழங்கிய அனைவருக்கும் ஏனையோருக்கும் நன்றி தெரிவித்தார்.   

 

· முன்னதாக சில வாரங்களுக்கு முன்னரே, சென்னிமலை வேலவரே கனவில் வந்து ஆணையிட்டதாகக் கூறி, வண்டி, காளைமாடுகள், சாட்டை மற்றும் வண்டி ஓட்டத் தேவையான உபகரணங்களை பல்வேறு ஊர்களைச் சேர்ந்த குறிப்பிட்ட பக்தர்கள் வேட்டுவபாளையம் வேளாளத்தம்பிரான் மடத்தைச் சேர்ந்த சின்னப் பூசாரியார் பொன்னுச்சாமி வசம் காணிக்கையாக அளித்தனர்.


· இரண்டு காளை மாடுகளை இந்த நிகழ்வுக்குக் காணிக்கையாக கொடுத்தவர் சென்னிமலையை அடுத்த முத்தூரைச் சேர்ந்த துரைசாமிக் கவுண்டர். காளை மாடுகளைப் பூட்டிச் செல்லும் இரட்டை மாட்டு வண்டியை காணிக்கையாகக் கொடுத்தவர் அந்தியூர் அருகே விராலிக்காட்டூர் கோபால் கவுண்டர்.


· கனவில் தோன்றிய இறை ஆணையைக் குறிப்பிட்டு, 12.2.84 அன்று காலை சென்னிமலை முருகன் கோவில் படிக்கட்டுக்களில் இரட்டைமாட்டு வண்டி செல்ல வேண்டும் என்பதற்காக, முன்னதாகவே பெரியார் மாவட்ட அன்றைய ஆட்சித்தலைவர் ராஜாராம் அவர்களிடம் அனுமதி கேட்கப்பட்டது. இம்மாதிரி மாதிரியான நிகழ்வுக்கு, முன்மாதிரி நிகழ்வுகள் நடைபெற்றிராத சூழ்நிலையில், பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் வண்டியை இழுத்துக் கொண்டு மாடுகள் மலைப் படிக்கட்டுக்களில் ஏறிச்செல்லும்போது, கூட்டத்தைக் கண்டு, காளை மாடுகள் மிரண்டு போய், தாறுமாறாக ஓட ஆரம்பித்து விட்டால், அசம்பாவித நிகழ்வுகள் நடக்கக்கூடாது, மற்றும் மக்களின் பாதுகாப்புக்காரணங்களுக்காக முதலில் அவர் அனுமதி மறுத்திருக்கிறார். “முருகன் அருளால் எந்தவிதமான அசம்பாவிதமும் நடக்காது” என்று பலரும் எடுத்துக்கூறிய போதும் கலெக்டர் அவர்கள் சென்னிமலைக்கு நேரில் வந்து, மலை உச்சிவரை படிக்கட்டுக்களில் ஏறிச் சென்று பார்வையிட்டிருக்கிறார். பிறகு அரைமனதோடுதான் நிகழ்ச்சிக்கு அனுமதியளித்திருக்கிறார் என்று பலரும் அந்நாளில் கூறுவதுண்டு..   




· முந்தைய நாளான 11.2.1984 அன்று பிற்பகல் சின்ன வேட்டுவபாளையத்திலிருந்து சென்னிமலைக்கு விட்டுப் புறப்பட்ட வண்டிக்கு வழி நெடுக வரவேற்பு அளிக்கப்பட்டது. இரவு சென்னிமலை அருள்மிகு கைலாசநாதர் கோவிலிலும் 12.2.84 அதிகாலை மலை அடிவாரத்திலும் சிறப்புப் பூசைகள் நடைபெற்றன.


· 1320 படிகளிலும் கம்பீரமாக ஏறிச் சென்ற காளை மாடுகள் பூட்டிய வண்டியைப் பின்தொடர்ந்து சென்ற அதிமுக்கியப்பிரமுகர்கள் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு ராஜாராமன், துணை ஆட்சியர் சந்திரபிரகாஷ், காவல்துறை கண்காணிப்பாளார் திரு அப்பாத்துரை ஆகியோர் அன்றைய மாலை வெளிவந்த கோவைப் பதிப்பான “மாலை முரசு” “சென்னிமலையில் இன்று நடந்த அதிசய நிகழ்ச்சி ..ஆறு லட்சம் பேர் பக்தர்கள் திரண்டு பார்த்தனர்” என்று முதல் பக்கக் கொட்டை எழுத்துத் தலைப்புச் செய்தியாக, சென்னிமலையில் மாட்டு வண்டி மலையேறிய செய்தியை வெளியிட்டது. இவ்வபூர்வ நிகழ்ச்சியை “ஹிந்து” ”இந்தியன் எக்ஸ்பிரஸ்” முதலிய ஆங்கிலத் தினசரிகளும், “தினமணி” ”தினத்தந்தி” “மாலைமுரசு” முதலிய தமிழ்தினசரிகளும், “இதயம் பேசுகிறது” ”தேவி” முதலிய தமிழ் வார இதழ்களும் சிறப்புச்செய்திகளாக வெளியிட்டன.

· பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா தேசிய செய்தி நிறுவனமும் இந்த நிகழ்ச்சி குறித்து செய்தி வெளியிட்டதனால், தேசிய அளவிலும் சென்னிமலையில் “இரட்டைமாட்டு வண்டி மலைப்படிக்கட்டுகளில் ஏறிச் சென்ற நிகழ்ச்சி முக்கியத்துவம் பெற்றது !   

· 12.2.84 அன்று காலையிலேயே இரட்டை மாடுகள் பூட்டப்பட்ட வண்டி மலையேறப் போகிறது என்பதால் 11.2.84 அன்று இரவிலிருந்தே பல ஊர்களில் இருந்து மக்கள் கூட்டம் சென்னிமலையை நோக்கி பயணித்தது. ஈரோடு காங்கயம் பெருந்துறையில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயங்கின. மக்களை சென்னிமலைக்கு கொண்டுவந்து சேர்த்தன !

· சென்னிமலைக்கு வரும் எல்லா வழித்தடங்களிலும் பேருந்துகள் வாகனங்கள் சென்னிமலைக்குச் சில கிலோ மீட்டர் தூரத்திலேயே நிறுத்தப்பட்டன. மக்கள் பாதசாரியாக எல்லாத் திசைகளில் இருந்தும் மலை அடிவாரத்துக்கும் மலைக்கும் குவிந்தனர். பல லட்சம் பேர் கலந்து கொண்ட அந்த நிகழ்சசிக்கு ஈரோடு மாவட்டம் காவல்துறை மற்றும் சென்னிமலை காவல்துறை அதிகாரிகளும் காவலர்களும் மிகச் சிறப்பான, பாராட்டுக்குரிய ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

· பரப்பளவில் சிற்றூராக உள்ள நம் சென்னிமலையில், “மலையா -மக்கள் தலையா” என்று அதிசயக்கும் வண்ணம் ஒரே சமயத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து பல லட்சம் மக்கள் திரளாகக் கலந்து கொண்டபோதும், எந்தவித அசம்பாவித நிகழ்வுகளும் இல்லாமல், 1320 மலைப் படிக்கட்டுக்கள் இரட்டை மாட்டு வண்டி ஏறிச் சென்ற அதிஅற்புத - அதிசய நிகழ்ச்சியை. நம் சென்னிமலைக்கு கூடுதல் பெருமை சேர்த்த நிகழ்ச்சியை, 36 ஆண்டுகள் கழித்து, நிகழ்வு நடைபெற்ற அதே தேதியான இன்று 12.2.2023இல் “மலரும் நினைவுகளாக ” மீண்டும் நினைவு கூர்வதில் / பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி.


From ; FB சென்னிமலை ஆண்டவர்

அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில்

 அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் வரலாறு🙏🏻 திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் மிக முக்கியமானதாக அலகுமல...